Monday 20 July 2015

தொழிலாளர் நலச் சட்ட சீர்திருத்தங்கள்: கருத்து வேறுபாடு நீடிப்பு..."திட்டமிட்டபடி செப்டம்பர் 2-இல் வேலைநிறுத்தம்'...

தில்லியில் நடைபெற உள்ள இந்திய தொழிலாளர்களின் 46ஆவது மாநாட்டை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடியுடன் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினர்.
 இருப்பினும், இந்த ஆலோசனைக்குப் பிறகும், ஒப்பந்தத் தொழிலாளர் முறை, குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட தொழிலாளர் நலச் சட்டங்களில் சீர்திருத்தங்கள் கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது.
 இந்தியத் தொழிலாளர்களின் மாநாட்டை ஆண்டுதோறும் தில்லியில் மத்திய அரசு நடத்துவது வழக்கம். கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 6 முறை இந்த மாநாடுகள் நடைபெற்றுள்ளன. அதற்கு முந்தைய வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் 5 முறை இந்த மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன.
 இந்நிலையில், இந்தியத் தொழிலாளர்களின் 46ஆவது மாநாட்டை தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி, திங்கள்கிழமை (ஜூலை 20) தொடக்கி வைக்கிறார். இரு தினங்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர்கள், மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
 இந்த மாநாட்டை முன்னிட்டு, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, பண்டாரு தத்தாத்ரேயா, பியூஷ் கோயல், ஜிதேந்திர சிங் ஆகியோரை தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
 இந்தச் சந்திப்புக்குப் பிறகு மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது, போனஸ் சட்டம் மற்றும் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு ஆகிய விவகாரங்களில் கருத்தொற்றுமை நிலவியது.
 ஒப்பந்தத் தொழிலாளர் முறை, குறைந்தபட்ச ஊதியம் ஆகியவை தொடர்பான விவகாரங்களில் கருத்து வேறுபாடு நிலவியது. இந்த விவகாரங்கள் தொடர்பாக விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
 இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் "தொழிலாளர்களின் நலன் தொடர்பான பல்வேறு பிரச்னைகள், பொருளதாரக் கொள்கைகள், தொழிலாளர் சட்டங்கள் ஆகியவை தொடர்பாக தொழிற்சங்கத் தலைவர்களின் கருத்துகளை பிரதமர் கேட்டறிந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
"திட்டமிட்டபடி செப்டம்பர் 2-இல் வேலைநிறுத்தம்'
 பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு தொழிற்சங்கத் தலைவர்கள் கூறியதாவது:
 மத்திய அரசுக்கும் எங்களுக்கும் இடையே எந்த விவகாரத்திலும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இந்த அரசுடன் எந்த விவகாரத்தின் மீதும் கருத்தொற்றுமை ஏற்படும் என்ற எதிர்பார்ப்புடன் நாங்கள் இங்கு வரவில்லை.
 அதேபோல, பிரதமர் எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. எனவே, எங்களின் 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திட்டமிட்டபடி வரும் செப்டம்பர் 2ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம் என்று அவர்கள் கூறினர்.

No comments: