Wednesday 15 April 2015

2ஜி வழக்கு: இன்று தொடங்குகிறது இறுதி வாதம்...

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கின் இறுதி வாதங்கள் தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 15) தொடங்க உள்ளது.
2011-இல் சிபிஐ தொடர்ந்த இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் . ராசா, மத்திய முன்னாள் தொலைத் தொடர்புத் துறைச் செயலர் சித்தார்த் பெஹுரா, ராசா அமைச்சராக இருந்த போது அவரது தனிச் செயலராகப் பணியாற்றிய ஆர்.கே. சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர்கள் ஷாஹித் உஸ்மான் பால்வா, டி.பி.ரியாலிட்டி நிறுவனர் வினோத் கோயங்கா, யூனிடெக் வயர்லெஸ்-தமிழ்நாடு நிறுவன மேலாண் இயக்குநர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் ஏடிஏஜி நிறுவன இயக்குநர்கள் கௌதம் தோஷி, சுரேந்தர் பிப்பாரா, ஹரி நாயர், மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, குசேகான் ஃபுரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் நிறுவன இயக்குநர்கள் ஆசிஃப் பால்வா, ராஜீவ் அகர்வால், கலைஞர் டிவி முன்னாள் இயக்குநர் சரத் குமார், பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானி ஆகிய 14 பேர் மீதும், ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ்-தமிழ்நாடு ஆகிய மூன்று நிறுவனங்கள் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர், சிபிஐ தரப்பினர் ஆகியோரின் வாதங்களும், அதைத் தொடர்ந்து இரு தரப்பினரின் சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டன. மேலும், அரசுத் தரப்பில் கூடுதல் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்ட மூவரின் வாக்குமூலமும், குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் கூடுதல் வாக்குமூலமும் பெறப்பட்டன. இதையடுத்து இவ்வழக்கின் இறுதி வாதங்கள் ஏப்ரல் 15 முதல் தொடங்கும் என்று நீதிபதி .பி.சைனி கடந்த மார்ச் 24-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.இதன்படி இறுதி வாதங்கள் முடிவடைந்ததும், 2011-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்புடைய சிபிஐ வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.182 பேரின் சாட்சியம் பதிவு: இந்த வழக்கில் 2011, அக்டோபர் 22-ஆம் தேதி மேற்கண்ட 14 பேர் மீதும், மூன்று நிறுவனங்கள் மீதூம் சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, 2011, நவம்பர் 11-ஆம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. சிபிஐ சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்த ரிலையன்ஸ் ஏடிஏஜி நிறுவனத் தலைவர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்பட 153 பேரிடமும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 29 பேரிடமும் இதுவரை சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், கடந்த மூன்றாண்டு காலத்தில் பல்வேறு கோரிக்கைகளுடன் சிபிஐ, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சுமார் 1,150 மனுக்களை சிபிஐ நீதிமன்றம் விசாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: