Sunday 1 March 2015

துறைமுகத் தொழிலாளர்கள் மார்ச் - 9 முதல் ஸ்டிரைக்...

நாடு முழுவதும் உள்ள துறைமுகங்களை, தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக, மார்ச் 9-ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட தொழிற்சங்கங்கள் முடிவுசெய்துள்ளன. வேலை நிறுத்தம் குறித்த அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் தூத்துக் குடியில் நடைபெற்றது.கூட்டத்திற்குப் பின் தூத்துக்குடி போர்ட் டெமாக்ரடிக் ஸ்டாப் யூனியன் செயலாளர் ரசல், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில், 12 பெரிய துறைமுகங்கள் உள்ளன. சென்னை,எண்ணூர்துறைமுகம், தனியார் பங்களிப்புடன் செயல்படுகிறது. மற்றவை, துறைமுகங்கள் சட்டத்தின் படி செயல்பட்டு வருகின்றன. இவற்றை, கம்பெனிகள் சட்டத்தின் கீழ், மார்ச் 31-ம் தேதிக்குள் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுஅதற்கான முயற்சி மேற் கொண்டு வருகிறது. சனிக்கிழமை தாக்கல் செய்யப் பட்டுள்ள மத்திய நிதிநிலை அறிக்கையில், துறைமுகங் களை கார்ப்பரேஷனாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது கண்டிக்கத்தக்கது. இது தனியார் மயமாக்கும் நடவடிக்கை. இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். தொழிலாளர்கள் எண்ணிக்கை குறையும் சலுகைகள் பறிபோகும் என தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதைக்கண்டித்து, மார்ச் 9-ஆம் தேதி முதல் காலவரையற்ற, ஸ்டிரைக் நடத்த தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. இதற்காக, துறைமுக நிர்வாகங்களிடம், தொழிற்சங்கங்கள், நோட்டீஸ் அளித்துள்ளன.மார்ச் 3-ம் தேதி காலை 9 மணியளவில் துறைமுக நிர்வாக அலுவலகம் முன்புதொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற வுள்ளது. 7-ம் தேதி மாலை சிதம்பரநகரில் குடும்ப உறுப்பினர்களுடன் துறைமுகத் தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் பங்கேற்கும் மாலைநேர தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது.கூட்டத்தில், தூத்துக்குடி போர்ட் டெமாக்ரடிக் ஸ்டாப் யூனியன் செயலாளர் ரசல், தலைவர் ஞானதுரை, அண்ணா டாக் அன்டு ஒர்க்கர்ஸ் யூனியன் செயலாளர் ஏசாதுரை, தலைவர் சண்முககுமாரி, ஜெனரல் ஸ்டாப் யூனியன் செயலாளர் செல்வகுமார், தலைவர் ஜேம்ஸ், போர்ட் மெரைனர்ஸ் அன்ட் ஜெனரல் யூனியன் செயலளார் சத்தியநாராணயன், தலைவர் வால்டர், தூத்துக்குடி போர்ட எம்ளாயீஸ் டிரேட் யூனியன் செயலாளர் செல்வராஜ், தலைவர் மதிவாணன், வஉசி போர்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் செயலாளர் ராஜ்குமார், தலைவர் பாலசுப்பிரமணியன், துறைமுக அலுவலர் சங்க செயலாளர் லிங்க துரை உட்பட 13 சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments: