Wednesday 19 November 2014

மீனவர்கள் 5 பேரும் விடுதலை தூக்கு தண்டனை ரத்து ...

போதைப்பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட பொய் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேரும் புதனன்று விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் இலங்கைக்கான ஹை கமிஷனர் யு.கே.சின்ஹாவை சந்தித்தனர். விடுவிக்கப்பட்ட மீனவர்கள் விரைவில் தமிழகம் திரும்புகிறார்கள். இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே இவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கியதைத் தொடர்ந்து இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இராமேஸ்வரம் அருகிலுள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், பிரசாந்த், லாங்லெட், அகஸ்டஸ், வில்சன் ஆகியோர் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் போதைப்பொருள் கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இவர்கள் ஐந்து பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து அக்டோபர் 30ம் தேதி கொழும்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தின. மீனவர்கள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், ஆர்.அண்ணாதுரை ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். இலங்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு நிதி அளித்தது. இந்நிலையில் தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கைஅமைச்சர் செந்தில் தொண்டை மான் தெரிவித்தார்.இதற்கு ஏற்பஇந்திய அரசின் சார்பில் செய்யப் பட்ட மேல்முறையீட்டு மனு வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களும் புதனன்று மாலை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்கள் இலங்கைத் தூதரக அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களை ஹை கமிஷனர் யு.கே.சின்ஹா சந்தித்தார். இதைத்தொடர்ந்து மீனவர்கள் விரைவில் தமிழகம் வருகின்றனர்
.
வரவேற்புதூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஐந்து மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதை தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பு வரவேற்றுள்ளதுகூட்டமைப்பின் தலைவர் ஜி.செலஸ்டின்பொதுச்செயலாளர் பா.கருணாநிதி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், அனைத்து மீனவர்களும் ஒருங்கிணைந்து போராடியதற்கு கிடைத்துள்ள வெற்றி இது என்று குறிப்பிட்டுள்ளனர்.

No comments: