Monday 14 July 2014

விதி மீறலையே விதியாக்கியது மோடி அரசு . . .

விதி மீறலையே விதியாக்கியது மோடி அரசு மக்களவையில் `டிராய்சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம். 
பிரதமரின் முதன்மை செயலாளராக நிருபேந்திர மிஸ்ராவை நியமிப்பதில் சட்டரீதியாக உள்ள தடைகளை `நீக்கவழிவகுக்கும் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (டிராய்) சட்ட திருத்த மசோதா திங்களன்று மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களவையில் இருந்து காங்கிரஸ், சிபிஎம், ஆம் ஆத்மி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (டிராய்) தலைவராக இருந்த நிருபேந்திர மிஸ்ரா (69) பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையச் சட்ட விதிகளின்படி, ஆணையத் தலைவரோ, உறுப்பினர்களோ ஓய்வு பெற்ற பின்னர் வேறு அரசுப் பதவிகளை வகிக்கக்கூடாது. இந்த விதியை மீறி நிருபேந்திர மிஸ்ரா பிரதமரின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்; பட்டிருக்கிறார். அவரது நியமனத்துக்காக கடந்த மே 28-ம் தேதி அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது.இந்தச் சட்டத்துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 6 மாதங்களுக்குள் ஒப்புதல் பெற வேண்டும் என்பதால், பிரதமரின் முதன்மைச் செயலாளர் நியமனத்தை சட்டப்பூர்வமாக்க அதாவது தனது விதிமீறலையே சட்டவிதியாக்க முனைந்த மோடி அரசு, மக்களவையில் வெள்ளிக்கிழமை (டிராய்) சட்டத்திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த நிலையில், டிராய் சட்ட திருத்த மசோதா மீது திங்களன்று மக்களவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், இந்தச் சட்ட திருத்த மசோதாவுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்துப் பேசினர். பின்னர், அவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதிமுக ஆதரவு;அதேவேளையில், பாஜக அரசு அவசரகதியில் கொண்டுவந்துள்ள இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது. அது குறித்து கருத்து வெளியிட்ட காங்கிரஸ் உறுப்பினர் மல்லிகார்ஜூன கார்கே, அதிமுக இத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்கான நிர்ப்பந்தம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.அவருக்கு பதிலளித்த அதிமுக தலைவர் தம்பிதுரை, பிரதமரின் முடிவை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று பதிலளித்தார். அதன்பின், குரல் வாக்கெடுப்பு மூலம் டிராய் சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ..எஸ். அதிகாரியான நிருபேந்திர மிஸ்ரா, டிராய் தலைவர் பொறுப்பில் இருந்து கடந்த 2009-ம் ஆண்டு ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
திரிணாமுல் திடீர் ஆதரவு;முன்னதாக இந்த மசோதவை காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து எதிர்த்து வந்த திரிணாமுல் காங்கிரஸ் திங்களன்று திடீரென ஆதரவு அளித்தது . திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவு காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

1 comment:

Unknown said...

தோழரே, விதிமீறலை விதியாக்கியது இருக்கட்டும்.டிராய்க்கு தலைவராக அவரை காங்கிரஸ் கட்சி நியமனம் செய்தது. பி.எம்.க்கே முதன்மைச் செயலராக மிஸ்ராவை பி.ஜே.பி நியமனம் செய்கிறது.விந்தை அல்ல இச்செயல்...பொருளாதார கொள்கை இரு கட்சிகளுக்கும் பொது....எனவே இது போன்ற காட்சிகள் வரிசையாக அரங்கேறும்.....அம்பலபடுத்து...அம்பலபடுத்து...ஊழியர்கள்,உறுப்பினர்கள் மத்தியில் அம்பலபடுத்து....தொடர்ந்து அம்பலபடுத்து...உங்களோடு நானும்....சௌந்தர்.